1. ஆறாம் ஆண்டில் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாள், நான் என் வீட்டில் யூதாவின் மூப்பர்களோடு உட்கார்ந்திருந்த போது ஆண்டவராகிய இறைவனின் கரம் அங்கே என் மேல் இறங்கிற்று.
2. நான் அப்பொழுது ஒரு காட்சி கண்டேன்; அக்கினி மயம் போன்ற சாயலையுடைய ஒருவரைக் கண்டேன்; அவர் இடுப்புத் துவக்கி கீழெல்லாம் அக்கினியாயும், இடுப்புத் துவக்கி மேலெலாம் ஒளியாய்த் துலங்கி மின்னும் வெண்கலம் போன்றும் இருந்தது.
3. கையைப் போலத் தேன்றிய ஒன்றை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்தார்; அப்போது ஆவி என்னைத் தூக்கி, பூமிக்கும் வானத்துக்கும் நடுவில் நிறுத்தி, பரவசத்தில் யெருசலேமுக்குக் கொண்டு போய்க் கடவுளின் முன்னிலையில் கோபம் வருவிக்கும் சிலை இருக்கின்ற வடதிசைக்கு எதிரில் உள்ள உள்வாயிலின் முற்றத்தில் என்னை விட்டார்.
4. இதோ, அங்கேயும் இஸ்ராயேல் ஆண்டவருடைய மகிமை, முன்னொரு நாள் நான் சமவெளியில் கண்ட காட்சியில் தோன்றியது போலவே காணப்பட்டது.
5. அவர் என்னிடம், "மனிதா, உன் கண்களை உயர்த்தி வடக்கே பார்" என்றார். நான் என் கண்களை உயர்த்தி வடக்கே நோக்க, இதோ, பலிபீடத்தின் வாயிலுக்கு வடக்கேயிருந்த முற்றத்தில் கோபமூட்டும் அந்தச் சிலை தென்பட்டது.
6. அப்போது அவர் என்னிடம், "மனிதா, அவர்கள் செய்வதைப் பார்க்கிறாயா? நமது திருத்தலத்தினின்று நம்மைத் துரத்துவதற்காக இஸ்ராயேல் வீட்டார் செய்கிற மாபெரும் அக்கிரமத்தைக் காண்கிறாயா? இதிலும் பெரிய அக்கிரமத்தைப் பார்க்கப்போகிறாய்" என்றார்.
7. பின்பு அவர் கோயில் மண்டப வாயிலுக்குக் கொண்டு போனார்; அங்கே சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
8. அவர் "மனிதா, நீ சுவரிலே ஒரு துவாரமிடு" என்று எனக்குச் சொன்னார். நான் சுவரிலே துவாரமிடும் போது அங்கே ஒரு வாயிற் படியைக் கண்டேன்.
9. நீ உள்ளே நுழைந்து அங்கே அவர்கள் செய்கிற கொடிய அக்கிரமங்களைப் பார்" என்றார்.
10. நான் உள்ளே நுழைந்து பார்க்கும் போது எல்லா விதமான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள், வெறுப்புக்குரிய மிருகங்கள் ஆகியவற்றின் சாயலான படிமங்களையும், இஸ்ராயேல் மக்கள் செய்து வைத்த எல்லாச் சிலைகளையும் கண்டேன்; அவை சுவரைச் சுற்றிலும் வரையப்பட்டிருந்தன.
11. அவற்றின் முன் இஸ்ராயேல் மக்களின் மூப்பர் எழுபது பேரும் நின்று கொண்டிருந்தனர்; அவர்களின் நடுவில் சாப்பானின் மகனாகிய யேசோனியாசும் நின்று கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் தூபக்கலசத்தைப் பிடித்திருந்தார்கள்; அதினின்று நறுமணப் புகை மிகுதியாய் எழும்பிற்று.
12. அப்போது ஆண்டவர், "மனிதா, இஸ்ராயேலின் மூப்பர்கள் இருளிலே தத்தம் அறைகளில் மறைவாகச் செய்கிறதை நீ கண்கூடாய்க் கண்டாயன்றோ? அவர்கள், 'ஆண்டவர் எங்களைப் பார்க்கிறார் அல்லர், ஆண்டவர் நாட்டினைக் கைவிட்டு விட்டார்' என்கிறார்கள் அல்லவா?" என்றார்.
13. அவரே தொடர்ந்து: "நீ கொஞ்சம் திரும்பி பார்; இதை விடப் பெரிய அக்கிரமம் இவர்கள் செய்வதைக் காண்பாய்" என்றார்.
14. அப்பொழுது ஆண்டவர் கோயிலின் வடக்கு வாயிலின் வழியாய் என்னைக் கூட்டிக் கொண்டு போனார்; ஆங்கே அதோனீஸ் சிலையின் முன்பாக அழுது கொண்டிருந்த பெண்களைக் கண்டேன்.
15. அப்போது அவர், "மனிதா, பார்த்தாயா? இன்னும் இதனை விடப் பெரிய அக்கிரமத்தைக் காண்பாய்" என்றார்.
16. அவர் என்னைக் கோயிலின் மூலதானத்தினுள் கூட்டிச் சென்றார்; கோயிலின் வாயிற்படியில் மண்டபத்திற்கும் பீடத்திற்கும் இடையில் ஏறத்தாழ இருபத்தைந்து பேர் இருந்தனர்; அவர்கள் முதுகைக் கோயிலுக்கும், முகத்தைக் கீழ்த்திசைக்கும் திருப்பி வைத்துக் கொண்டு கிழக்கில் தோன்றிய கதிரவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
17. அவர் என்னை நோக்கி: "மனிதா, இவர்கள் செய்கிறதைப் பார்த்தாயா? யூதாவின் குலத்தினர் இங்கே செய்யும் அக்கிரமங்கள் அற்பமானவையோ? தங்கள் அக்கிரமத்தால் நாடு முழுவதையும் நிரப்பி நமது கோபத்தை மூட்டுகிறார்களே! இதோ, திராட்சைக் கொடியை எடுத்து முத்தி செய்கிறார்கள், பார்.
18. ஆகையால் நாமும் அவர்களைக் கோபத்தோடேயே நடத்துவோம்; நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டாது. நாம் அவர்கள் மீது தயை கூர மாட்டோம்; அவர்கள் எவ்வளவு தான் உரத்த குரலில் கூவி அழைத்தாலும் நாம் செவிசாய்க்க மாட்டோம்" என்றார்.

Roman Catholic தமிழ்

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save